30 செப்டம்பர் 2010

22 நகரங்களில் இலங்கைக்கு எதிராகப் பேரணிகள்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்கும் போராட்டம் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் 22 நகரங்களில் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மேற்படி போராட்டம் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் Gap மற்றும் Victoria வணிக நிலையங்களின் முன்னால் ஸ்டான்ஃபோர் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் இப்போராட்டத்தில் இணைந்தமை முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயமாகும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதுமுள்ள மாணவர்களும் இப்போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்தனர்.
இலங்கையிலுள்ள இன அழிப்பு நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் புறக்கணிக்குமாறும் வலியுறுத்தும் விதமாக இப்போராட்டம் நடைபெற்றதாக அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு விட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கக்கேடான மனித உரிமைகள் நிலைப்பாட்டையும் இரத்தம் தோய்ந்த இன அழிப்புக் கொள்கைகளையும் கொண்டுள்ள நாடுகளில் தமது வணிகங்களைச் செய்யும் நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டியது உலகிலுள்ள அனைத்து மக்களும் தவிர்க்க முடியாதது என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகை கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் இலங்கையிலுள்ள மனித உரிமைகள் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆகும். ஆடை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்குக் கிடைத்துவந்த வருமானம் தற்போது 500 மில்லியன் டொலர்கள் இழப்பைச் சந்திக்கிறது என்று உள்ளூர் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதத்துடன் பிரிட்டிஷிலுள்ள NEXT இலங்கையுடன் தான் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை நிறுத்தியுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பிற நாடுகளிலுள்ள 22 நகரங்களிலும் இலங்கை ஆடைகளைப் புறக்கணிக்கும் பிரச்சாரங்கள் முதன்மை பெறத் தொடங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக